KRS

Just for fun

03/07/2024

🤝👏 *மனதைத் தொட்ட கதை* 👏🤝
🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏
பூட்டிய கிரில்லுக்கு அப்பால், ஒரு பெரியவர், கசங்கிய சாதாரண வேட்டி சட்டை, முகத்தில் கருப்பும், வெள்ளையுமாக மண்டிய ரோமக் காடு, நீண்ட பயணத்தால் களைத்த முகம் என, கையில் நகைக்கடை விளம்பரத்துடன் இருந்த ரெக்சின் பையுடன் நின்றிருந்தார்.

அவர் கையிலிருந்த சீட்டை பார்த்தார்.

""ஆனந்த், நம்பர். 8, யோகானந்தம் நகர்?''

""ஆமாம்... இது தான். நான் தான் ஆனந்த்... நீங்க... என்ன வேணும்?''

அவர் வறண்ட உதடுகளை, நாவால் ஈரப்படுத்திக் கொண்டார்.

""நான் உங்கப்பாவோட நண்பன்; காரைக்காலேருந்து வர்றேன். உங்கப்பா லெட்டர் கொடுத்து அனுப்பியிருக்கார்.''

பெரியவர் ரெக்சின் பை ஜிப்பை திறந்து, ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினார்.
வாங்கிப் பார்த்த ஆனந்த், ""அப்பாவா?'' என்று வினவியபடி, கடிதத்தை படித்தான்.

அதில், "அன்புள்ள ஆனந்துக்கு, அப்பா எழுதுவது. ஆசிர்வாதம். கடிதம் கொண்டு வரும் ராமசாமி, என் நண்பன். ரொம்ப கஷ்ட ஜீவனம். இவரது ஒரே பிள்ளை, சமீபத்தில் விபத்தில் இறந்து விட்டான். விபத்துக்கான இழப்பீடு கிடைத்தால், ராமசாமியும், அவர் மனைவியும் வாழ, ஓரளவாவது உதவியாக இருக்கும்.

""விபத்து சம்பந்தமான போலீஸ் விசாரணை, விபத்து ஏற்படுத்திய டிராவல்ஸ் வேன் உரிமையாளர் தர ஒப்புக் கொண்ட இழப்பீடு போன்ற சகல விவரங்களையும் சேகரித்து, அவரிடம் கொடுத்தனுப்பி இருக்கிறேன். சென்னையில், தலைமை அலுவலகத்தில் தருவார்களாம்... சென்னை அவருக்கு புதிது. நீ கொஞ்சம் அவருக்கு உதவி செய்தால் நல்லது; செய்வாய் என்று நம்புகிறேன். மற்றபடி உடம்பை பார்த்துக் கொள். பொங்கலுக்கு கண்டிப்பாக ஊருக்கு வர வேண்டும். உன் அப்பா பரமேஸ்வரன்...' என்று எழுதப்பட்டிருந்தது.

அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றார் ராமசாமி.
ஒரு வினாடி யோசித்தவன், சட்டென சாவி எடுத்து வந்து, கேட்டைத் திறந்தான்.

""வாங்க சார்... உட்காருங்க...'' என்றவன், டம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான். தயங்கியபடி உள்ளே வந்த ராமசாமி, தண்ணீரை வாங்கிப் பருகினார்.

""சாப்பிட்டீங்களா?''

""இல்லே... வழியிலே இரண்டு வாழைப் பழம் சாப்பிட்டேன். பஸ் லேட்டு, காலையில காரைக்கால்லே கிளம்பினா, சாயங்காலம் மெட்ராஸ் போயிடலாம்ன்னு உங்கப்பா சொன்னார். பஸ் பிரேக் டவுன் ஆயிடுச்சு... அதான்... அகாலத்திலே வந்து...''

""அதனாலே என்ன... பரவாயில்லை.''

பிரிட்ஜை திறந்து பார்த்தான் ஆனந்த்.

தோசைமாவு இருந்தது. நான்கு தோசை சுட்டு, மிளகாய் பொடி, எண்ணெய், தண்ணீர் கொண்டு வந்து, டேபிள் மேல் வைத்தான்.

""சாப்பிடுங்க... இதோ வர்றேன்,'' என்றவன், வாசல் பக்கம் மொபைலுடன் போனான்.

திரும்பி வந்த போது, சாப்பிட்டு முடித்து, கை நிறைய பேப்பர்களுடன் காத்திருந்தார் ராமசாமி.

""சொல்லுங்க... என்ன நடந்தது?'' என்று, அவர் எதிரில் அமர்ந்து, பேப்பர்களை வாங்கிப் பார்த்தான்.

பையனின் போட்டோ இருந்தது. 22 வயதில், அழகாக, பதவிசாக இருந்தான் பையன். ஆனந்துக்கு கண்கள் கலங்கின.

முகத்தை துடைத்துக் கொண்டார் ராமசாமி.

""இவனுக்கு முன்னாலே பிறந்த நாலஞ்சு பேரும், சின்ன வயசிலேயே போய் சேர்ந்துட்டாங்க... இவன் தான் தங்கினான். மகேஷ்ன்னு பேர்; கஷ்டப்பட்டு படிக்க வெச்சேன்... பொறுப்பான பிள்ளை. ஸ்காலர்ஷிப்லயே பி.இ., முடிச்சான். வேலை கிடைச்சுட்டா, நம்ம கஷ்டம் தீர்ந்துடும்ன்னு வாய்க்குவாய் சொல்வான்; வேலையும் கிடைச்சுது. என்னையும், என் மனைவியையும், நிற்க வச்சு நமஸ்காரம் செய்துட்டு, மெட்ராஸ் கிளம்பினான். பஸ் ஸ்டாண்ட் போக, ரோடு கிராஸ் செய்யறப்போ, வேகமா வந்த டிராவல் வேன் மோதி, ஸ்பாட்லேயே...'' மேல் துண்டால் முகத்தை மூடி, குலுங்கினார் ராமசாமி; பேசாமல் அவரையே பார்த்தான் ஆனந்த்.
அவராகவே தொடர்ந்தார்.

""அந்த வேன் சொந்தக்காரர், நஷ்ட ஈடு தர ஒத்துக்கிட்டார். முதல்லே அதை வாங்கவே மனசு ஒத்துக்கல. பிள்ளையை பறி கொடுத்துட்டு, அந்த பணத்திலே சாப்பிடறதான்னு வெறுப்பா இருந்தது. உங்கப்பா தான் எனக்கு ஆறுதல் சொல்லி, வாங்கிக்க சொல்லி வற்புறுத்தினார். எனக்கு நிரந்தரமா ஒரு வேலையும் கிடையாது. என் மனைவி ஏற்கனவே நோயாளி, பிள்ளை போன துக்கத்திலே, படுத்த படுக்கையாயிட்டா... எங்களை பகவான் அழைச்சுக்கற வரை, சாப்பிட்டுத் தொலைக்கணுமே... அதனாலே, கடைசியா நஷ்ட ஈடு வாங்கிக்க சம்மதிச்சேன். உங்கப்பா தான் எல்லா ஏற்பாடுகளையும் செய்து, இங்கே அனுப்பி வெச்சார். என் பிள்ளை உங்களுக்கு உதவி செய்வான்னு
லெட்டர் கொடுத்தார்.''

""செய்யறேன்... கண்டிப்பா உதவி செய்றேன்,'' என்று எழுந்தவன், அவர் படுக்க, பாயும் தலையணையும் கொடுத்தான்.
மறுநாள் காலை, காபி போட்டு அவருக்கு கொடுத்து, தானும் குடித்து, குளித்து விட்டு வந்தான்.

அவரும் குளித்து விட்டு வர, இருவருமாக பைக்கில் கிளம்பினர்.

""இங்கே நுங்கம்பாக்கம்ன்னு இருக்காமே... அங்கே தான் ஹெட் ஆபீஸ் இருக்காம்.''

""நுங்கம்பாக்கம் பக்கம் தான். நான் கூட வந்து செஞ்சு தர்றேன்,

வழியில் ஓட்டலில் டிபனை முடித்து, டிராவல் ஆபீஸ் வந்தனர்.
பார்மாலிடீஸ் எல்லாம் முடித்து, "செக்' கைக்கு வர மதியானம் ஆகி விட்டது.

""ரொம்ப நன்றிப்பா... எனக்காக ரொம்ப சிரமப்பட்டுட்டே. நான் இப்படியே ஊருக்கு கிளம்பறேன். இப்ப பஸ் புடிச்சா, ராத்திரிக்குள்ளே காரைக்கால் போயிடலாம். என் மனைவி தனியா இருக்கா; துணைக்கு ஆள் இல்லை...''

""நானே பஸ் ஏத்தி விடறேன் வாங்க,'' என்றவன், ஓட்டலுக்கு அழைத்துப் போய், அவர் மறுத்தும் கேளாமல், சாப்பிட வைத்து, தானும் சாப்பிட்டான்.
கோயம்பேடு வரை, பைக்கில் அழைத்துச் சென்று, காரைக்கால் பஸ்சில் ஏற்றி விட்டான். டிக்கட் வாங்க என்று ஐநூறு ரூபாயை, பிடிவாதமாக அவர் சட்டைப் பையில் திணித்தான்.

""ஒரு நிமிஷம்...'' என்று போனவன், ஒரு பிளாஸ்டிக் பையுடன் வந்தான்.

""ஊர் போய் சேர எத்தனை நேரம் ஆகுமோ, வழியிலே சாப்பிட்டுக்குங்க...'' என்று, டிபன் பொட்டலம், தண்ணீர் பாட்டில் அடங்கிய பையை, அவரிடம் கொடுத்தான்.

அவர் நெகிழ்ந்தார்.

""என்னாலே உனக்கு ரொம்ப சிரமம்ப்பா. லீவு வேறே போட்டுட்டு, எனக்காக அலைஞ்சிருக்கே... ஊருக்கு போனதும் முதல் வேலையா உங்கப்பாவைப் பார்த்து நன்றி சொல்லணும்.''

ராமசாமி உணர்ச்சி வசப்பட்டு பேசிக் கொண்டே போக, அமைதியாக அவர் பக்கத்தில் அமர்ந்தான், ஆனந்த்.

""ஒரு விஷயம் சார்... நீங்க தேடி வந்த ஆனந்த் நான் இல்லே...''
ராமசாமி திடுக்கிட்டார்.

""என்னப்பா சொல்றே?''

""ஆமாம்... நீங்க அட்ரஸ் தப்பா வந்துட்டீங்க... நான் இருக்கிறது, யோகானந்தம் நகர் எக்ஸ்டன்ஷன். நீங்க, மெயின் யோகானந்தம் நகர் போயிருக்கணும். அது, கிட்டத்தட்ட, 2 கி.மீ., தொலைவில இருக்கு.''

ராமசாமிக்கு, "குப்'பென வியர்த்தது.

""அடடா... தப்பு செய்துட்டேனே... ரொம்ப ரொம்ப சாரிப்பா. நீ, நான் வந்தவுடனேயே சொல்லியிருக்கலாமே... அனாவசியமா எதுக்கு எனக்காக மெனக்கட்டு...''

அவரைத் தடுத்தான் ஆனந்த்.

""நீங்க வந்தது ராத்திரி பத்தரை மணிக்கு... மெட்ராஸ்ல இருக்கிறவங்களுக்கே, இங்க அட்ரஸ் தேடி கண்டு பிடிக்கறது கஷ்டம்; நீங்க மெட்ராசுக்கு புதுசு வேற. அதிலேயும், நீங்க வந்த காரியத்தை பத்தி தெரிஞ்சதுலே, எனக்கு மனசு சங்கடமா போயிட்டது...

""அதான் உங்களை சாப்பிட சொல்லிட்டு, லெட்டர்லே இருந்த நம்பருக்கு கால் போட்டு பேசினேன். நீங்க அட்ரஸ் மாறி வந்த விஷயம் கேட்டு, உங்க நண்பர், அதான் அந்த ஆனந்தோட அப்பா ,ரொம்பவே வருத்தப்பட்டார். அவர் கிட்டே, அவர் பிள்ளையோட நம்பர் கேட்டு வாங்கிப் பேசிட்டு... பொழுது விடிஞ்சதும், ஒரு ஆட்டோவிலே உங்களை அனுப்பி வைக்கலாம்ன்னு இருந்தேன்.

""ஆனா, மொபைல் போன்ல பேசினது ஆனந்தோட மனைவி. அவர் ஆபீஸ் விஷயமா டில்லி போயிருக்காராம். வர ஒரு வாரம் ஆகுமாம். அப்பதான் முடிவு செய்தேன். நேரடியா, நானே உங்களுக்கு உதவி செய்திடலாம்ன்னு... எந்த ஆனந்துன்னா என்ன சார்... நஷ்ட ஈடு உங்களுக்கு கிடைக்க, நான் உதவியா இருந்தேனேன்னு, நிம்மதி என் மனசிலே நிறைஞ்சு இருக்கு. அது போதும் சார்...''

டிரைவரும், கண்டக்டரும் பஸ்சில் ஏற, எழுந்தான் ஆனந்த்.
அவன் கைகளைப் பற்றி கண்ணில் ஒற்றிக் கொண்டார் ராமசாமி. அவன் உள்ளங்கை, ராமசாமியின் கண்ணீரால் நனைந்தது.

""நல்லா இருப்பா... நல்லா இரு... வேறென்ன சொல்றது?''
பதினைந்து வருடங்களுக்கு முன் செத்துப் போன தன் அப்பாவை நினைத்துக் கொண்டான்.

"அப்பா... நீங்க இப்ப உயிரோடு இருந்து, இது மாதிரி லெட்டர் கொடுத்தனுப்பி இருந்தாலும், கண்டிப்பா உதவி செஞ்சிருப்பேன். என் வளர்ச்சியை பார்க்காமலே போயிட்டீங்களே... யாரோ ஒருத்தருக்கு பிள்ளையா இருந்து, அவர் நண்பருக்கு உதவி செய்திருக்கேன் அப்பா... உங்களுக்கு திருப்தி தானே?'
கனத்த மனதுடன், பஸ்சை விட்டு இறங்கினான் ஆனந்த். 👌

பல முறை படித்த கதை... ஆனாலும் ஒவ்வொரு முறையும் கண்கலங்கும்....!!
👩🏼‍🦯👩🏼‍🦯👩🏼‍🦯👩🏼‍🦯👩🏼‍🦯👩🏼‍🦯👩🏼‍🦯👩🏼‍🦯

28/05/2024

அலுவலகத்தில் கொடுக்கப்படும் ஸ்வீட்ஸ், சாக்லெட்களை சிலர் குழந்தைகளுக்கென்று பத்திரப்படுத்துவார்கள். கடைநிலை ஊழியர்கள் என்றால் பொருளாதாரம் சார்ந்து அச்செயல் ஏற்புடையதாக இருக்கும். ஆனால், தேவையெனில் எப்போது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள இயலுகிற, தாராளமான பொருளாதாரம் உள்ளவர்களும் இதே செயலை செய்யும் போது , " அட, உங்களுக்குன்னு கொடுத்ததை ஏம்யா மூட்டை கட்டுறீங்க, ஃபன்னி ஃபெல்லோஸ்' என்று தோன்றும்.

இதெல்லாம் நான் அப்பாவாகும் வரை. இப்போதெல்லாம் நானும் மூட்டை கட்டிவிடுகிறேன். இவ்வளவுக்கும் வாங்க முடியாத பொருளோ, அபூர்வமானதோ ஒன்றும் இருப்பதில்லை. 'இந்த சாக்லெட் என் பொண்ணுக்கு பிடிக்குமே' என்று தோன்றிவிட்டால் அதன் பின் அந்தச் சாக்லெட்டை தின்ன முடிவதில்லை. செண்ட்டிமெண்ட்டை உதறித் தள்ளிவிட்டு சாப்பிட்டாலும் அது சுவைப்பதில்லை. ஒரு மாதிரி டிஸ்ட்ரப்டா ஃபீல் ஆவதை உணர்ந்தும் இருக்கிறேன். நமக்கு என்று கொடுத்ததை குழந்தைகளிடம் கொடுத்து அதை அவர்கள் சாப்பிடுவதை காணும் போது கிடைக்கும் ஃபீல் 'குழலினிது யாழ் இனிதுக்கு' ஒப்பானது.

ஊரில் ஆயாக்கள் விஷேச வீடுகளில் சாப்பிட்டுவிட்டு அப்பளத்தை ஒரு கவரில் போட்டு யாரும் அறியாமல் முந்தியில் சொருகி வருவதன் சூட்சுமம் புரிய எனக்கு ரெண்டு புள்ளைங்க பொறக்க வேண்டியதாக இருந்திருக்கிறது.

பகிர்வு பதிவு

01/05/2023

சென்ற வாரம் ஒரு நாள் மருத்துவரை பார்க்க போயிருந்தேன்.ஒரே கூட்டம். எனக்கு முன்னால் 12 நபர்கள் அவரைப் பார்க்க காத்திருந்தார்கள். ஒரு நோயாளியை மருத்துவர் பார்த்து அனுப்ப சராசரியாக 10 நிமிடங்கள் ஆகின்றன என்பதை கவனித்தேன். மனது விரைந்து கணக்கு போட்டது. மருத்துவர் என்னை அழைக்க கிட்டத்தட்ட 120 நிமிடங்கள். அதாவது இரண்டு மணி நேரம் ஆகலாம்.

நான் அங்கிருந்து கிளம்பி வேறு எங்கேயும் போய்விட்டும் வர முடியாது. அதனால் என் வரிசை வாய்ப்பு மாறி விடலாம். நாற்காலியில் அமர்ந்திருந்தபடி கண்களை மெல்லச் சுழற்றி பார்த்தேன். ஒரு சிலர் அமைதியாக இருந்தார்கள். சிலர் அடுத்தவருடன் பேசியபடி இருந்தார்கள். வேறு ஒருவர் அங்கிருந்த தினசரி பத்திரிகைகளை புரட்டிக் கொண்டிருந்தார். அடுத்தது யார் என்பதை மிக கவனமாக கவனித்தபடி நடுத்தர வயதுக்காரர் ஒருவர் நாற்காலி நுனியில் அமர்ந்திருந்தார்.

இவர்களை எல்லாம் வேடிக்கை பார்த்து என்னுடைய இரண்டு மணி நேரமும் கழிய வேண்டியதுதானோ எத்தனை முக்கிய விஷயங்களுக்கு இல்லை என்று ஆகிவிட்ட நேரம் இங்கு இப்படியே போய்விடுமோ என்று கவலையாக இருந்தது.

இதைத்தான் "Forced idle time" என்கிறார்கள். நம் மீது திணிக்கப்பட்ட பயனற்ற நேரம்.

மருத்துவரிடம் மட்டுமல்ல எல்லா வேலைகளிலும், பணியிடங்களிலும் ,பணிகளிலும் இது இருக்கத்தான் செய்கிறது.

முடி திருத்தும் நிலையங்களில், திரையரங்குகள், ரயில்வே பேருந்து டிக்கெட் கவுண்டர்களில் ,விமான நிலையங்களில் , பெரிய மனிதர்களை பார்க்கப் போய் இருக்கையில் என்று அவரவர் வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப எத்தனை எத்தனையோ இடங்களில் சிறியதும் பெரியதுமாய் காத்திருப்புகள் நம் மீது திணிக்கப்படுகின்றன. ஏன் நம் வீட்டிலேயே கூட விருந்தினர்களோ நண்பர்களோ வருவதாக சொல்லிவிடுவார்கள். தாமதமானால் அவர்கள் வரும் வரை வேறு வேலை ஓடாது.

என்ன செய்வது என்று தெரியாமல், எப்போது நிகழும் என்று தெரியாமல், எவ்வளவு நேரம் என்பது தெரியாமல் விழிக்க வைக்கும் காத்திருப்புகள்...

அலுவலகங்கள் தொழிற்சாலைகளும் கூட இந்த விடயத்தில் விதிவிலக்கு அல்ல. மேலதிகாரிகளை பார்க்க, மற்றவர்கள் வருகைக்காக, திட்டமிட்ட நிகழ்ச்சிகள் ரத்தாகிவிட இது போன்ற காரணங்கள் நடுநடுவே வரத்தான் செய்கின்றன.

இவற்றின் விளைவு "Forced idle time" நம் மீது திணிக்கப்பட்ட பயனற்ற நேரம்.

இக்காத்திருப்புகள் தவிர்க்க முடியாதவைதான். நமக்கு இருக்கும் பயன்படுத்தக்கூடிய நல்ல நேரத்தை கபளீகரம் செய்யும் விரோதிகள்தான்.

மேலும் பலரும் சுலபமாக நேரத்தை இழப்பது பயணங்களின் போதுதான் என்று சொல்லலாம். முன்பு 1979 மும்பையில் தினம் தினம் புனே இருந்தும் இன்னும் பல தொலைதூர வெளியூர்களிலிருந்தும் மும்பைக்கு வேலைக்கு வருகிறார்கள். தினம் 2 மணி நேரம் இப்படி. இரண்டு மணி நேரம் அப்படி. மொத்தம் நாலு மணி நேரம்.

சென்னைக்கும் வருகிறார்கள். செங்கல்பட்டில் இருந்து அரக்கோணம் , காஞ்சிபுரம் போன்ற ஊர்களில் இருந்து வருகிறார்கள். இன்னும் எத்தனையோ ஊர்களில் இருந்தும் வெளியூர்களுக்கு தினம் போகிறவர்கள் இருக்கிறார்கள். இந்த பிரயாண நேரத்தை சிறப்பாக பயன்படுத்துவர்களும் இருக்கிறார்கள்.

மும்பையில் ரயிலில் நின்று கொண்டு படிப்பவர்கள் இருக்கிறார்கள். இருக்கையில் அமரந்தவுடன் தன் கணக்கு நோட்டு புத்தகத்தை பிடித்து வைத்துக் கொண்டு எழுத ஆரம்பித்து விடுபவரையும் பார்த்திருக்கிறேன். ஓடும் ஆட்டோவில் பூக்கட்டும் பெண்கள். அவ்வளவு ஏன் பிரயாணத்தின் போது காய்கறியை நறுக்குபவர்கள் கூட இருக்கிறார்கள்.

பெப்சி நிறுவனத்தில் தொழிலக இயக்குனராகப் பணியாற்றிய சரத் என்பவர் தினம் தினம் அலுவலகத்திற்கு வேனில் செல்வார். ஒன்றரை மணி நேர பயணம். பெரும்பாலும் செல்போனில் அலுவலகப் பணி சம்பந்தமாக பேசுவதில் செலவிடுவார். அன்றைக்கு எவர் எவர்க்கு என்னென்ன சொல்ல வேண்டுமோ , எவரிடம் என்ன விபரம் கேட்க வேண்டுமோ அனைத்தையும் முடிவு செய்து கொண்டு தான் வேனில் ஏறுவார். பயணம் முடிவதற்குள் வரிசையாக பேசி முடித்து விடுவார்.

விமான நிலையங்களில் காத்திருக்கையில் சிலரைப் பார்த்தால் வியப்பாக இருக்கும். வருவார்கள். போர்டிங் பாஸ் எடுப்பார்கள். நாற்காலியில் அமர்வார்கள். கர்ம சிரத்தையாய் தான் படிக்க வேண்டிய புத்தகத்தை எடுத்து படிக்க தொடங்கி விடுவார்கள். அழைப்பு வந்ததும் எழுவார்கள். வரிசையில் நிற்கையில் மீண்டும் வாசிப்பு. விமானத்தில் அமர்ந்ததன் பின்னர் மீண்டும் வாசிப்பு. அவர்களுக்கு ஏது நேர வீண்விரயம்?

எனக்கு புத்தகங்கள் படிக்க நேரமில்லை என்பதற்கும் கிடைக்கும் சின்ன சின்ன இடைவெளிகளிலும் தான் படிக்க வேண்டியதை படிப்பேன் என்பதற்கும் எவ்வளவு வேறுபாடு.

இல்லை வேறு எங்கு சென்றாலும் நான் படிக்க வேண்டியவற்றை எடுத்துச் செல்லப் போகிறேன் இதனால் இனிமேல் காத்திருப்பேன். காத்திருக்கும் நேரம் என் விருப்பப்படி என் தேவையை நிறைவு செய்யும் விதத்தில் கழியும்....

என்னதான் மேலே பந்தி பந்தியாக கூறினாலும் இவ்வாறானவர்களை இக்காலத்தில் காண்பது அரிது.

இவை அனைத்தையுமே இக்காலத்தில் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் ஆக்கிரமித்து விட்டன என்றே கூறலாம். அதுவே நிதர்சனமும் கூட...

01/05/2023

ஒரு காய்கறிகடை லட்சுமி அம்மாள் காய்கறி வாங்க வந்திருக்கிறாள்.

கத்தரிக்காய் என்ன விலையப்பா?

நீங்களாமா மகாலட்சுமியாட்டம் வந்திருக்கீங்க! காலங்காத்தால எடுத்துக்கங்க அம்மா!

விலை என்ன சொல்லு!

விலையென்னம்மா பொல்லாத விலை. நீங்கதான் அம்மா காலையிலேயே முதல் போணி பண்றீங்க. உங்க ராசியான கையால் எடுத்துக்கோங்க!

இருபது ரூபாயை கொடுத்துவிட்டு மலர்ந்த முகத்தோடு வீடு திரும்புகிறார்.

அடுத்து ஒரு விளையாட்டு மைதானம்! ரமேஷ் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறான். அவன் பௌலிங் செய்கிறான். பந்தை நன்கு தேய்த்து வீசப் போகும்போது தான் கவனித்தான். மைதானத்திற்குள் ஜீன்ஸ் பேண்டும் டி-ஷர்ட்டும் அணிந்த மூன்று பெண்கள் நுழைகிறார்கள். இந்த இளம் பெண்கள் அங்கு நடக்கும் கிரிக்கெட் விளையாட்டை கவனமாக பார்த்தபடி வந்தார்கள்.

பிடித்தது சனி அங்கே பேட் செய்து கொண்டிருந்தவனுக்கு! ரமேஷ் முன்பைவிட வேகமாக ஓடி வந்து பந்தை எறிந்தான். அந்த வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாது மட்டை பிடித்தவன் கிளீன் போல்ட்டானான். அந்தப் பெண்கள் கொஞ்சம் சும்மா இருக்கக் கூடாதா? கையைத் தட்டி ரமேஷின் பந்துவீச்சை பாராட்டினார்கள். அடுத்து ஆட வந்தவனுக்கு தன்னை நோக்கி ரமேஷ் எப்படி பந்து வீசினான் என்றே தெரியாது. ஸ்டம்ப் உடைந்து நொறுங்கியது.

அடுத்து ஒரு வீட்டு வேலை செய்யும் சரசுவிடம் வீட்டுக்கார அம்மாள் மரகதம் பேசிக் கொண்டிருக்கிறாள்.

ஏமா சரசு! நீ கழுவின பாத்திரமா இது! ஆச்சரியமா இருக்கு!

ஏம்மா! என்ன விஷயம்?

இல்லை நீ கழுவின பாத்திரம்னா அப்படியே கண்ண மூடிக்கிட்டு பாலை காய்ச்சலாமே ஆனா இது உள்ள பாரு எப்படி இருக்கு!

அதை கொண்டாங்க இப்படி! அதைத்தான் சொல்றது இந்த சரசு வேலை செய்றப்போ யாரும் தொந்தரவு பண்ணாதீங்கனு!

வாங்கிச் சென்று மீண்டும் அதை துலக்கி பள பளவென்று கொண்டு வருகிறாள்.

இந்த மூன்று நிகழ்ச்சிகளிலும் ஒரு ஒற்றுமையை கவனித்திருக்கலாம். பிரச்சனை அதிகம் இன்றி மனமுவந்து சுறுசுறுப்பாக வேலை நடந்ததை பார்த்தோம்.

உங்கள் கை ராசியான கை!

நீங்கள் லட்சுமிகரம்!

ஆகா நீ எப்படி பந்து வீசுகிறாய். நாங்கள் ரசிக்கிறோம் என கைதட்டல் சொல்லாமல் சொல்லிய வார்த்தை.

நம்ப முடியவில்லை உன் வேலையின் தரம் மிக உயர்ந்ததாயிற்றே!

இந்த வார்த்தைகள் செய்ததுதான் மாயம். ரமேஷின் பந்துவீச்சு வீரியம் பெற்றது. வேலை செய்யும் சரசு முகத்தைக் சுழிக்காமல் பாத்திரத்தை இரண்டாவது முறை கழுவிக் கொண்டு வந்தாள்.
அதிக பேரம் பேசாமல் கத்தரிக்காய் வாங்க செய்தது.

மாறாக முதலில் கத்திரிக்காயில் இருந்து கையை எடும்மா! காலங்காத்தால வந்துட்டாங்க! என சொல்லி இருந்தாலோ, ஆஹா என கேலியாக பெண்கள் ரமேஷின் பந்துவீச்சு , ஓட்டத்தை கேலி செய்திருந்தாலோ, உனக்கு எதுக்கு சம்பளம் கொடுக்குறன்னே தெரியல! எல்லா பாத்திரத்தையும் நாங்க ஒரு தரம் கழுவ வேண்டி இருக்குது என்று மரகதம்மாள் சொல்லி இருந்தாலோ வேலை நடந்து இருக்குமா? அடுத்த விக்கெட்டும் உடன் விழுந்திருக்குமா?

பாராட்டு என்பதை மிகச் சிறந்த ஊட்டச்சத்து. மனிதர்களுக்கு பாராட்டும் தன்னை மதிக்கிறார்கள் என்ற எண்ணமும் எப்போதும் தேவை.

அவ்வளவு ஏன் கடவுளுக்கே 108, 1008 என்று போற்றிகள் தேவைப்படவில்லையா?

புகழ்ச்சி வேறு பாராட்டு வேறு. பாராட்டு என்பது யதார்த்தமானதாக இருக்க வேண்டுமே தவிர அந்த பாராட்டு மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கக் கூடாது .பாராட்ட வேண்டும் என்பதற்காக சம்மந்தம் இல்லாமல் பேசக்கூடாது.

பேப்பர் போடும் பையனிலிருந்து கோயில் குருக்கள் வரை நம்ம வீட்டு பெரியவர்கள் முதல் அலுவலக நண்பர் வரை எல்லோரையும் பாராட்ட வேண்டும்.

இதில் நிறைய பலன் இருக்கிறது. நம்மை பார்த்தால் முகத்தை திருப்பிக் கொள்ள மாட்டார்கள். புன்னகைப்பார்கள். நம்மை விரும்புவார்கள். நம்மை ஒதுக்க மாட்டார்கள்.

நாலு பேர் பையை தூக்கிக் கொண்டு கடையில் நிற்கும் போது சாருக்கு என்ன வேணும்னு கேட்டு முதல்ல போடு என்று கடைக்காரர் சொல்லலாம்.

எங்கே உங்களை ரொம்ப நாளா காணும் என்று ஒரு இரண்டு நாட்கள் ஆனாலும் நண்பர்கள் கேட்பார்கள். எல்லாம் எதனால்? இன்முகத்துடன் மற்றவர்களின் நல்ல குணங்களை வெளிப்படையாக சொல்வதனால் தானே!

மாறாக நம்மில் சிலர் நம்மைப் பற்றி அதிகமாக நினைப்பதனால் மற்றவர்களிடம் உள்ள குறைகளை பெரிதுபடுத்தி பேசி விடுகிறோம்.

நீங்க அப்படி செஞ்சது நல்ல அல்ல!

விலை கூட கொடுத்துட்டீங்க!

ஏமாந்துட்டீங்க!

தேவையா? மற்றவர்களை நல்லவற்றை சொல்லி மகிழ்விக்க சந்தர்ப்பங்கள் இருக்கையில் தவறுகளை தேடி சொல்லிக் காட்ட வேண்டாமே!

ஆக முடிந்த அளவு மற்றவர்களை பாராட்டுங்கள். கொஞ்சம் உண்மையாக யோசித்து எதார்த்தமாக பாராட்டுங்கள். சந்தோசமாக காரியத்தை சாதித்துக் கொள்ளுங்கள்.

"வாழ்க்கையை வெற்றி கொள்ள... மனிதர்களை புரிந்து கொள்ள..."

01/05/2023

1970 களில் டாடா ஸ்டீல் நிறுவனத்தார் உரப்பைகள் தைக்கும் குறிப்பிட்ட வகை மெஷின் ஊசி அனுப்ப சொல்லி ஜெர்மன் நிறுவனத்திற்கு கடிதம் எழுதுகிறார்கள்.

அங்கிருந்து பதில் வருகிறது. நாங்கள் அந்த வகை ஊசி தயாரிப்பதை மூன்று மாதங்களுக்கு முன்பே நிறுத்திவிட்டோம். அந்த வகை ஊசி தயாரிப்பதில்லை என்றாலும் அந்த ஜெர்மனிய நிறுவனம் வாடிக்கையாளரின் ஆர்டருக்கு பதில் அனுப்பி இருக்கிறார்கள். பாராட்டலாம் என்று தோன்றுகிறது அல்லவா? கொஞ்சம் பொறுங்கள். இன்னும் கொஞ்சம் தகவல் இருக்கிறது. கடிதம் அதோடு முடியவில்லை. எங்களிடம் இருந்தவற்றுள் சில ஊசிகளை சேகரித்து உங்களுடைய உடனடித் தேவைக்காக உடன் அனுப்பி இருக்கிறோம். காசு கூட வாங்காமல் அந்த ஊசிகளை அனுப்பி இருக்கிறார்கள்.

வேறுவிதமான ஊசி கொண்டு டாடா நிறுவனம் அவர்களின் வேலையை முடித்துக் கொள்ளலாம். ஆனால் அதைத் தேட அப்படிப்பட்ட வேறு ஒரு சப்ளையரை கண்டுபிடிக்க நாளாகுமே. இடைப்பட்ட நேரத்தில் நம்மை நம்பி நம்பிக்கை ஒரு வாடிக்கையாளர் சிரமத்துக்கு ஆளாக கூடாது என்று சிந்தித்து அதற்காக முயற்சி எடுத்து இருக்கிறார்கள் அந்த ஜெர்மனியின் நிறுவனத்தார்.

அதுதான் செய்தி செய்வதை பயன் கிடைக்குமாறு செய்ய வேண்டும்.

ஏகே செட்டியாரை தெரியாமல் யாரும் இருக்க முடியாது அவர் குமரிமலர் என்று ஒரு பத்திரிகை நடத்திக் கொண்டிருந்த நேரம் அது தமிழில் வெளிவந்த மிகச் சிறப்பான பத்திரிகைகளில் ஒன்று. இன்னும் பலரும் அதன் பிரதிகளை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார்கள்.

அமுதசுரபியின் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் அப்போது மாணவர். குமரிமலர் பத்திரிகை கடைகளில் விற்பனைக்கு கிடைக்காது என்பதால் ஆசிரியரும் வெளியிடுபவருமான ஏகே செட்டியாருக்கு தனக்கு பத்திரிகை அனுப்புமாறு கேட்டு சந்தா பணம் அனுப்புகிறார்.

ஏகே செட்டியாரிடம் இருந்து பணம் திரும்பி வருகிறது. கூடவே ஒரு பதிலும். குமரிமலர் 500 பிரதிகள்தான் அச்சடிக்கிறேன். சரியாக இருக்கிறது. அதனால் அனுப்ப இயலாது. உங்கள் ஊரில் இன்னார் சந்தா கட்டி பத்திரிகை வாங்குகிறார். அவரிடம் வாங்கி படியுங்கள்.

ஜெர்மன் நிறுவனம் செய்தது போலதான் இது. அனுப்ப இயலாது என்பது வரை சரி. உங்கள் ஊரிலேயே இன்னாரிடம் வாங்கி படியுங்கள் என்று தெரிவிப்பது தான் கூடுதல் முயற்சி.

அடுத்தவருக்கு செய்வதையும் அக்கறையாக செய்வது பயனுற செய்வது...

அந்த சமயம் புதுடில்லியில் அவர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். கோடைகாலம். விடுமுறை கோட்டில் வரும் வழக்குகளை பார்க்க வேண்டிய பணி. அன்றைய தினம் அதிகமான வழக்குகள் ஒவ்வொன்றாய் எடுக்கப்படுகிறது. விசாரணை நடக்கிறது. சில தள்ளி வைக்கப்படுகின்றன. சிலவற்றிற்கு தீர்ப்புகள் சொல்லப்படுகின்றன.

அவ்வளவு பரபரப்பான சூழ்நிலையிலும் நீதிபதியின் கண்கள் மொத்த கோட் வளாகத்தையும் அங்கு நடப்பனவற்றையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டிருக்கின்றன. முகத்தில் அதிக பதட்டத்துடன் ஒரு வழக்கறிஞர் தவித்துக் கொண்டிருப்பதை கவனிக்கிறார் நீதிபதி. உதவியாளரை விட்டு அந்த குறிப்பிட்ட வழக்கறிஞரை அழைக்கிறார். விபரம் கேட்கிறார்.

இந்த வழக்கறிஞரின் கட்சிக்காரர் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவர். அவருக்கு இறுதித் தேர்வு மறுநாள் தொடங்க இருக்கிறது. ஆனால் அவரை தேர்வு எழுத கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. காரணம் அந்த மாணவருக்கு வருகை பதிவு குறைவு. அந்த வழக்கு வரிசைப்படி வந்தால் தாமதமாகலாம். ஏன் அன்றைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் கூட போகலாம். அதனால் ஒரு மாணவன் படிப்பு கெடலாம் என்று நினைக்கிறார்.

நீதிபதி வழக்கை வரிசை மாற்றி எடுக்கிறார். விசாரணை முடிகிறது. விவரங்கள் கேட்டுக் கொண்டபின் தீர்ப்பளிக்கிறார். மாணவன் அட்டன்ட் செய்த ஸ்பெஷல் வகுப்புக்களையும் கணக்கெடுத்துக் கொண்டால் தேவைப்படும் குறைந்தபட்ச வருகைப்பதிவு நாட்கள் வருகிறது. அதனால் அந்த மாணவன் தேர்வு எழுத அனுமதிக்கப்பட வேண்டும். அதே சமயம் முழு விசாரணையின் போது தீர்ப்பு மாறலாம். அதனால் அவன் தேர்வுத் தாள்கள் திருத்தப்பட வேண்டும். ஆனால் முடிவுகளை தீர்ப்பு வரும்வரை வெளியிட வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

இதுவரை செய்ததே சிறப்பான பணி. அவ்வளவு பணியிலும் அதிலும் ஒரு நீதிபதி அவர் பதற்றமாக இருக்கிறார் என்றெல்லாம் கவனிக்க வேண்டிய அவசியமோ அப்படிப்பட்டவரை அழைத்து விசாரிக்க வேண்டிய தேவையோ இல்லை. பலரும் செய்வதில்லை. ஆனால் இவர் செய்திருக்கிறார். அதற்கு மேல் ஒரு படி மேலேபோய் நிலைமையின் அவசரத்தை புரிந்து கொண்டு வரிசை மாற்றி முன்னதாக அழைத்திருக்கிறார். விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறார்.

தவிர ஆழ்ந்து யோசித்து ஸ்பெஷல் கிளாஸ்களும் கூட வகுப்புகள் போலதானே என்று மாணவனுடைய பக்கம் யோசித்து அதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்திருக்கிறார். மாணவனின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தேர்வு எழுத அனுமதிக்குமாறு உத்தரவு போடுகிறார். ஆனால் இறுதி முடிவு எடுக்காமல் முழு விசாரணைக்காக காத்திருக்கலாம் என்கிறார். இதுவரை கூட சரி.

அதற்கு மேலும் அந்த நீதிபதி யோசிக்கிறார். மாணவன் படிப்பது தஞ்சாவூரில் அல்லவா? வழக்கறிஞரிடம் இந்த உத்தரவு எப்படி கல்லூரி நிர்வாகத்தை சென்றடையும்? நேரம் இருக்கிறதா? தீர்ப்பால் பயன் கிடைக்குமா? பின்பு மேலும் சில வரிகளை தீர்ப்பில் சேர்க்கிறார். உத்தரவு கிடைப்பதற்கு முன் தேர்வு துவங்கி விட்டாலும் இந்த மாணவன் தேர்வு எழுத அனுமதிக்கப்பட வேண்டும். அவன் தேர்வு எழுத துவங்கிய நேரத்தில் இருந்து அவனுக்கான அந்த நேரம் கணக்கிடப்பட வேண்டும்.

இப்படி செய்தவர் ஏதோ ஐம்பது , நூறு அல்ல மொத்தம் லட்சத்துக்கு அதிகமான தீர்ப்புகள் கொடுத்தவர். ஆம் அவர் தமிழகத்தைச் சேர்ந்த நீதியரசர் ஆர்.எஸ். இலட்சுமணன். பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதியானவர்.

பெயருக்காகவும் கடமைக்காகவும் செய்வதில்லை. சிலர் செய்தால் பயனுறச் செய்கிறார்கள். கேட்காமலே செய்கிறார்கள். மற்றவர்களுக்காக அவர்கள் யோசிக்கிறார்கள். கூடுதல் முயற்சி எடுத்துச் செய்கிறார்கள். செய்வன திருந்தச் செய் என்பதோடு சேர்த்து செய்வதை முழுப்பயன் கிடைக்கும் வகையில் செய்கிறார்கள்.

" மனிதர்களைப் புரிந்து கொள்ள... வாழ்க்கையை வெற்றி கொள்ள... "

23/03/2023

படித்ததில் பிடித்தது

உங்கள் கணவரோ மனைவியோ வெளியூர் செல்கின்றனர். அங்கே வேறு யாரும் அதிகம் பழக்கமில்லை, அங்கு திடீரென ஏடிஎம் கார்டு உட்பட பணப்பையை தவறவிட்டுவிடுகிறார்.

இப்படி ஒரு சூழலை நினைத்துப்பாருங்கள்.

நீங்கள் அவருக்கு எப்படி இங்கிருந்தே உதவுவது.

மிகச்சுலபம், அருகில் உள்ள ஏதாவது ஒரு பெரிய தபால் நிலையம் செல்லுங்கள், அங்கே IMO (Instant Money Order) அனுப்பவேண்டும் என்று சொல்லுங்கள்.
விண்ணப்பத்தில், பெறுநர், அனுப்புநர் விபரம் மற்றும் அனுப்பவிரும்பும் தொகை மூன்றையும் நிரப்பி பணத்தை செலுத்தினால், உங்களுக்கு ஒரு சீல் செய்யப்பட்ட கவர் தரப்படும்.

வெளியே வந்து அந்த கவரை பிரித்தால் உள்ளே ஒரு 16 இலக்க எண் இருக்கும், அந்த நம்பரை உங்கள் கணவர் அல்லது மனைவிக்கு SMS செய்யுங்கள், அந்த எண் என்ன என்று அந்த கவரை உங்களுக்கு கொடுத்த தபால்நிலைய ஊழியருக்கு கூட தெரியாது.

உங்கள் கணவர் அல்லது மனைவி தாங்கள் இருக்கும் ஊரில் உள்ள பெரிய தபால் நிலையத்துக்கு சென்று அங்குள்ள விண்ணப்பத்தில் இந்த 16 இலக்க எண்ணை எழுதி கொடுத்தால் உடனே பணம் கொடுக்கப்படும்.

ரூ.1000 முதல் ரூ.50,000 வரை அனுப்பலாம். இது Western Union Money Trasfer போல தானேனு நீங்கள் கேட்கலாம், ஆனால் Western Union கிளைகள் இல்லாத இடங்களிலும் அஞ்சல்துறை அலுவலகம் உள்ளது.

இந்த சேவை இந்தியா முழுவதும் சுமார் 40,000 இடங்களில் உள்ளது, தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1500 கிளைகளில் இந்த சேவைகிடைக்கும்.
நம்மில் எத்தனை பேருக்கு இந்த விபரம் தெரியும்.

நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.பிறருக்கும் தெரியப்படுத்துங்கள்.

05/03/2023

மாணவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்?
தத்துவஞானி சாக்ரடீஸ் சொன்ன விளக்கம்.

ஒரு மாணவன் சாக்ரடீஸிடம் வந்தான்.

ஐயா, மாணவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்? என்று கேட்டான்.

அதற்கு சாக்ரடீஸ்,
மாணவன் என்பவன், கொக்கைப் போல இருக்க வேண்டும்,
கோழியைப் போல இருக்க வேண்டும்,
உப்பைப் போல இருக்க வேண்டும்,
உன்னைப் போல இருக்க வேண்டும் என்றார்.

மாணவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள் என்றான்.

கொக்கு,
ஒற்றைக் காலில் நீண்ட நேரம் பொறுமையாக நிற்கும்.
மீன்கள் வந்தவுடன் விரைந்து செயல்பட்டுப் பிடித்து விடும்.
அதுபோல,
ஒரு மாணவன் சரியான வாய்ப்புக் கிடைக்கும் போது அதைப் பயன்படுத்தி,
அரிய செயல்களைச் செய்ய வேண்டும் என்றார்.

கோழியைப் போல இருக்க வேண்டும் என்றீர்களே அதற்கு என்ன அர்த்தம்? என்று கேட்டான் மாணவன்.

கோழி என்ன செய்யும்? குப்பையைக் கிளறும். ஆனால்,
அந்தக் குப்பைகளை விட்டுவிட்டு தனக்குத் தேவையான உணவை மட்டும் எடுத்துக் கொள்ளும். அதுபோல,
மாணவர்கள் தாம் சந்திக்கும் தீமைகளைத் தூரம் தள்ளி, நன்மைகளை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் சாக்ரடீஸ்.

அடுத்தது,
உப்பைப் போல இருக்க வேண்டும் என்றீர்களே…

ஆமாம்.
உப்பை எந்த உணவோடு கலக்கினாலும்,
அது இருக்கிறது என்று கூற முடியும்.
ஆனால்,
கலக்கிய உணவில் உப்பு கண்ணுக்குத் தெரியாது. அதன் சுவையை மட்டுமே உணர முடியும்.
அதுபோல,
மாணவர்கள் எந்தத் துறையில் இறங்கினாலும் அதில் சிறப்பான தனித்தன்மையை வெளிப்படுத்தி,
தனது மறைவுக்குப் பின்னும் அதை இவர் தான் செய்தார் என்று கூறும்படி விளங்க வேண்டும் என்றார்.

எல்லாம் சரி,
உன்னைப் போல இருக்க வேண்டும் என்றீர்களே… அதற்கு என்ன அர்த்தம்? என்று கேட்டான்.

மாணவன் என்பவன் தனக்குள் எழக்கூடிய சந்தேகங்களை,
எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும்.
அதற்காகத் தான் உன்னைப் போல இருக்க வேண்டும் என சொன்னேன் என்று புன்னகைத்தார் சாக்ரடீஸ்.

05/02/2023

்ப்ப_காவடி 🐍 அரோகரா 🐓

பாம்பினைக் காவடியில் கட்டிக்கொண்டு வந்து காணிக்கை செலுத்துவது சர்ப்பக் காவடியாகும்.

சர்ப்பக்காவடி எடுப்பவர் கடும் விரதம் இருப்பார்கள். சர்ப்பக் காவடி எடுப்பவர்கள் 41 நாள் விரதம் இருப்பார்கள். அவர்கள் கனவில் ஒரு குறிப்பிட்ட பாம்பை காட்டில் எந்த இடத்தில் இருக்கிறது என்று கனவு வருமாம். அவர்களும் அந்தக் காட்டில் போய் ஒரு குறிப்பிட்ட அந்த இன பாம்பை போய் பிடித்து அதை ஒரு பெட்டியில் வைத்து உப்பிட்டு கொண்டு வந்து, அதைக் காவடியாக சுமந்து வந்து திருச்செந்தூர் கடற்கரையில் விடுவார்கள். அது வேறு எங்கும் யாருக்கும் தொந்தரவு செய்யாமல் நேரே கடலின் உட் பகுதிக்கு சென்று விடுமாம்.

அந்த அரிய காட்சி இதோ 👇

12/06/2022

உலகப் புகழ்பெற்ற இந்தப் படம் செய்தித்தாளில் வெளிவந்த தினம் இன்று (1993).

இப்படத்தை தன் கேமராவில் பிடித்த கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார். ஏன்?

கெவின் கார்ட்டர்- உலக புகழ்பெற்ற
புகைப்படக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும் நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற ஆசையும் ஆர்வமும் இருந்தன. இந்த ஆர்வம் அவரை நாடு,நகரம்,கிராமம்,
காடு, மலை என்று கொண்டு சென்றது.

1993இல் இந்த ஆர்வம் அவரை தனது சக புகைப்படப்
பத்திரிக்கையாளர்களுடன்
சூடானுக்குக் கொண்டு சென்றது. அப்போது சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது.

குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள்
உண்ண உணவின்றி, பருகநீரின்றி பசி,
தாகத்தில் தவித்துக் கொண்டிருந்தனர்.

பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின்
நிலைகளைக் காமிராவில் பதிவு செய்ய
கெவின் தொலைதூர கிராமங்கள் வரை
சென்றார்.

இறுதியாக அவர் முயற்சி கைகூடியது. ஒரு நாள் தன் காமிராவை தோளில் தொங்க விட்டுக் கொண்டு உள்ளத்தை உலுக்கக் கூடிய படத்துக்கான காட்சியைத் தேடியலைந்து கொண்டிருந்தபோது அப்படிப்பட்ட காட்சி தென்பட்டது;

பசி பஞ்சத்தால் அடிபட்ட நோஞ்சன் நிலையில் உள்ள ஒரு சிறுமி நடக்கக் கூட இயலாத நிலையில், எலும்புக் கூடு போன்ற தன்னுடலை தவழ்ந்து இழுத்துக் கொண்டு மெல்ல மெல்ல
ஊர்ந்து செல்வதைக் கண்டார்.

அந்தச் சிறுமி ஐக்கிய நாடுகளின் சபையின் சார்பாக அமைக்கப்பட்டு இருந்த உணவு வழங்கும் முகாமை நோக்கி தள்ளாடியபடி
தவழ்ந்து கொண்டிருந்தது உண்மையிலேயே இதயத்தைப் பிழியக் கூடியதாக இருந்தது.

தோளில் இருந்து காமிராவை இறக்கி கோணம் பார்த்த கெவினுக்கு இன்னொரு வியப்பும் காத்திருந்தது.

ஆம்; அந்த எலும்பும் தோலுமான சிறுமிக்கு பின்னாலேயே சிறிது தொலைவில் ஒரு பிணம் தின்னிக் கழுகும் சிறுமியின் மீது பார்வையை
நிலை நிறுத்திக் கொண்டு இருந்தது.

எப்போது சிறுமியின் உடலை விட்டு உயிர்
பிரியும்; மீதியுள்ள அந்தத் தோலையும் அதைச்
சுற்றி இருக்கும் சிறிது மாமிசத்தையும் எப்போது சாப்பிடலாம் எனக் காத்திருந்தது பிணம் தின்னிக்கழுகு.

கெவின் கேமரா லென்சை கண்ணுக்கு ஒத்திக் கொண்டார்; சிறுமியையும் கழுகையும் ஒரு பிரேமில் அடக்கிக் கொண்டு ‘க்ளிக்’ செய்தார்.

இப்போது அவரது புகைப்படக்கருவியில் மிக அரிதினும் அரிதான படம் பதிவாகி விட்டது.

இதை விற்றால் நல்ல விலை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் காமிராவைத் தோளில் மாட்டிக் கொண்டு தனது வண்டியை ஸ்டார்ட் செய்தார்;
பறந்து விட்டார். இந்த அரிதான படத்தை
‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கைக்கு விற்று
விட்டார்.

இந்தப் புகைப்படம் 1993 மார்ச் திங்கள் 26 ஆம் நாள் காலை நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்ததும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் பத்திரிக்கை அலுவலகத்திற்கு தொலைப்பேசி மூலம்
தொடர்பு கொண்டனர்.

அனைவரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டனர். புகைப்படத்தில் உள்ள சிறுமி என்ன ஆனாள்?
அவள் உயிருடன் பிழைத்தாளா அல்லது இறந்து விட்டாளா? இந்தக் கேள்விக்கான பதில் பத்திரிக்கையின் தொலைபேசி ஆப்ரேட்டரிடமோ படத்தை எடுத்த கெவின் கார்ட்டர்டமோ இல்லை.

1994,மே 23 அன்று பெரும் கை தட்டல்களுக்கு இடையே கெவின் கார்ட்டர் கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் பிரமாண்டமான
அரங்கத்தில் இந்த அரிதான புகைப்படத்திற்கான புலிட்சர் விருதப் பெற்றுக்கொண்டார் இந்த விருது புகைப்படத் துறையில் நோபல் விருதுக்கு இணையானது.

விருது பெற்ற சில நாட்களுக்குப்பின் கெவின் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

கெவினுக்கும், அங்கு இருந்த பிணம்தின்னிக் கழுகுக்கும் என்ன வேற்றுமை? இரண்டும் ஒரே விதமாகத்தான் செயல்பட்டுள்ளனர்.

‘குறைந்தபட்சம் புகைப்பட நிபுணர் கெவின் அந்த சிறுமிக்கு ஒரு வாய் தண்ணீர் தந்து உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்; அல்லது தனது வலுவான கைகளினால் அந்தச் சிறுமியைத் தூக்கிச் சென்று உணவளிக்கும் அமைப்பு அலுவலகத்தின் வாயிலிலாவது சேர்த்து இருக்கலாம்; கல்லெடுத்து வீசி அந்தக் கழுகையாவது விரட்டி இருக்கலாம்;

ஆனால் இவற்றில் எதையும் செய்யாமல் வெறும் ஒரு படத்தை எடுத்தார்; அதை அதிக விலை தந்த பத்திரிக்கைக்கு விற்று விட்டார் என்று ஒருவர்
அவர் மீது குற்றம் சாட்டியதுதான் காரணம்.

இரண்டு மாதங்களுக்குப் பின் கடற்கரைக்கு
அருகில் அவரது கார் நின்று கொண்டிருந்தது.
அதில் அவர் பிணமாகக் கிடந்தார்.

கெவின் தற்கொலை செய்துகொண்டார்.

அவரது பிணத்திற்கு அருகில் காவல்துறைக்கு
ஒரு கடிதம் கிடைத்தது. அதில் சில வரிகளே இருந்தன.

முதல் வரி I am Really, Really Sorry...

நாம் எவராக இருந்தாலும்
சரி, நம்மிடம் மனிதம் இல்லையெனில்
நாமும் மிருகத்திற்கே
ஒப்பாவோம்...

11/06/2022

* #அப்பா* படித்ததில் பிடித்தது

விமலா… ஜில்லுன்னு ஒரு கிளாஸ் தண்ணி;

அப்புறம், சூடா ஒரு கப் காபி கொடு.”

தண்ணீரையும், காபியையும் கொண்டு வந்து வைத்தாள் விமலா.

“விமலா… அப்பா ஏன் கொல்லைப் புறத்தில் உட்கார்ந்து இருக்கார்?”

”ம்… நீங்களே கேளுங்க அந்த கண்றாவியை.”

காபியை ஒரே மடக்கில் குடித்தவன், தந்தையின் அருகில் வந்தான்.

அவரது தோளை ஆதரவாக பற்றினான்.

“அப்பா… எழுந்திரிச்சு உள்ளே வாங்க.”

தந்தையின் கையை மென்மையாக பிடித்து அழைத்து வந்து, சோபாவில் அமர்த்தினான்.

“ஏம்பா என்னமோ மாதிரி இருக்கீங்க?”

அவர் சொல்லத் தயங்கினார்.

“எதுவா இருந்தாலும் சொல்லுங்கப்பா.”

“அவர் சொல்ல மாட்டார்…

நானே சொல்றேன்…

கரண்ட் பில்லும், ஸ்கூல் பீசும் கட்டிட்டு வாங்கன்னு குடுத்த, பத்தாயிரம் ரூபாயை தொலைச்சுட்டு வந்து நிக்கறார்.

கேட்டா,

“எங்கே வெச்சு தொலைச்சேன்னே தெரியலைமா…’ ன்னு சொல்றார்.”

அவர் முகத்தைப் பார்க்க பாவமா இருந்தாலும், 10 ஆயிரம் ரூபாய் போனதில், அவனுக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

விமலா மேலும், அவனை சூடேற்றினாள்…

“இந்த அளவுக்கு அஜாக்கிரதையும், பொறுப்பில்லாமையுமா ஒருத்தர் இருப்பாங்க.

இவர்,

பேங்கில வேறெ கேஷியரா இருந்தாரு.

எப்படித்தான் இத்தனை காலம் கேஷியர் வேலை பார்த்தார்னே தெரியலை.”

”விமலா… நீ கொஞ்சம் பேசாம இரு.

நான்தான் விசாரிச்சிட்டு இருக்கிறேன்ல்ல.”

”எங்க வெச்சுப்பா தொலைஞ்சிச்சு?” தந்தையிடம் கேட்டான் கதிரேசன்.

”அதுதாம்பா எனக்கும் புரியலை.

விமலா கிட்டே பணத்தை வாங்கிட்டு, ஈ.பி., ஆபீசுக்கு போயிட்டு இருக்கும் போது, நம்ம எதிர்த்த வீட்டு ரிட்டையர்டு போஸ்ட் மாஸ்டர் சேஷாத்ரியை வழியில பார்த்தேன்.

அவரும், ஈ.பி., ஆபீசுக்கு தான் போறேன்னு சொன்னதும், நானும், அவருமா பேசிட்டே நடந்து போனோம்.

அங்க ஒரே கூட்டமா இருந்தது.

கூட்டம் குறையட்டும்ன்னு, நானும், அவருமா ஒரு மர நிழல்ல உட்கார்ந்தோம்.

தாகமா இருக்குன்னு, ரெண்டு பேரும், ஆளுக்கு ஒரு இளநியை குடிச்சிட்டு, நானே காசைக் குடுக்கலாம்ன்னு திரும்பிப் பார்த்தா, “பேக்’கை காணோம். கடைசியில, இளநீருக்கு போஸ்ட் மாஸ்டர் தான் காசை கொடுத்தார்.”

”அந்த இளநீர்க்காரன் எடுத்திருப்பானோ!"

“இல்லப்பா… அவன் என் முன்னாலதான் இருந்தான்.

பின்னால,

இருந்த வேற யாரோ தான், எனக்குத் தெரியாம எடுத்திருக்காங்க.”

விமலா குறுக்கிட்டாள்…

”பணப் பைய யாராச்சும் பின்னால வைப்பாங்களா?

சுத்த கோமாளித்தனமா இருக்கு.

சொந்தமா சம்பாத்தியம் இருந்தாத்தானே, காசோட அருமை தெரியும்.

என்னோட புருஷன் சம்பாதித்ததை, வேறெ எவனோ திங்கணும்ன்னு விதி.”

”இந்த ஒரு தடவை தானம்மா இப்படி நடந்திச்சு.

ரிட்டையர்டு ஆனதுக்கப்புறம், இத்தனை நாளா, நான்தானே கஷ்டப் பட்டுட்டு வர்றேன்.

அப்பெல்லாம், ரொம்ப ஜாக்கிரதையாத்தானே இருந்தேன்.”

”ஒரு தடவை தொலைத்தாலும், மொத்தமா, 10 ஆயிரம் ரூபா… சர்வ ஜாக்கிரதையாத்தான் இருக்கணும்.

அங்க,

என்னோட வேலை பார்த்தவங்க நின்னுட்டு இருந்தாங்க.

இங்க, என்னோட சிநேகிதனை பார்த்தேன்னு சொல்லி, நாள் முழுக்க வெட்டிப் பேச்சு பேசிட்டு நிற்கக் கூடாது,” என்று பொரிந்து தள்ளினாள் விமலா.

”விமலா… கொஞ்சம் மரியாதை குடுத்து பேசு.

என்ன இருந்தாலும், அவர் என்னோட அப்பா.”

”ஆமா நீங்க தான் மெச்சிக்கணும்.

சும்மாதானே வீட்டில இருக்காரு.

காலைலயும், சாயந்தரமும் குழந்தைகள ஸ்கூல்ல கொண்டு விடச் சொன்னா, “வயசான காலத்தில என்னால முடியலை…’ன்னு வயசை ஒரு சாக்கா வெச்சிட்டு, ஜகா வாங்கிக்கிறது;

உருப்படியா பண்ணிட்டு இருந்தது, ரேஷன்ல பொருள் வாங்கறதும், கரன்ட் பில், ஸ்கூல் பீஸ் கட்டறதும் தான்.

இனி,

இந்த ஒரு காரணத்தை வெச்சு, இந்த வேலையிலிருந்தும் ஜகா வாங்கிக்கலாம்ல்ல.”

கதிரேசன் குறுக்கிட்டான்.

“விடு விமலா… அவருக்கு முடியலைன்னா, நானோ, நீயோ போயி கட்டிட்டு வந்திடலாம்.

இதுக்குப் போயி…”

“ஆமா, நானோ, நீங்களோ போயி எல்லா வேலையும் செஞ்சிட்டு வந்திடலாம்.

இங்கே,

இந்த பெரிய மனுஷன், நல்லா சாப்பிட்டுட்டு, அந்த கோவில், இந்த கோவில்ன்னு சுத்திட்டு வரட்டும்.

நேரத்திற்கு சமைச்சுப் போடத்தான் நான் இருக்கேன்ல.”

”ஏய் இப்ப என்ன பண்ணனும்ங்கற?” எரிச்சலுடனேயே கேட்டான் கதிரேசன்.

“எம்மேல ஏன் எரிஞ்சு விழறீங்க?

கொஞ்ச நாள், உங்க தங்கச்சி வீட்டில கொண்டு போயி விடுங்க.

அப்பத்தான்; நம்ம வீட்டோட அருமை தெரியும்.”

”என்ன மாப்பிள்ளே… ஏதோ, சூடான விவாதம் போல தெரியுது…

சிவபூஜைல கரடி நுழைஞ்சிருச்சோ கேட்டபடியே வீட்டினுள் நுழைந்தார், விமலாவின் தந்தை சிவராமன்.

”அப்பா வாங்கப்பா…

இந்த, வேகாத வெயில்ல ஏம்பா நடந்து வந்தீங்க?

ஒரு ஆட்டோ புடிச்சா, பஸ் ஸ்டாண்டிலிருந்து, நம்ம வீட்டிற்கு மிஞ்சிப் போனா, நாற்பதோ, ஐம்பதோ கேட்பான்.”

”நடக்கிறது உடம்புக்கு நல்லதுதானேம்மா.

சரி…சரி… இந்த பையில பழங்களும், சிப்சும் இருக்கு.

குழந்தைகள் வந்தா குடு.

மொதல்ல, இதை போயி உள்ளே வெச்சிட்டு வா.”

பையை கிச்சனில் வைத்து விட்டு, தந்தைக்கு லெமன் ஜூசை எடுத்து வந்தாள் விமலா.

”அப்பா இந்தாங்க,

“ஜில்’லுன்னு குடிங்க.”
“அதை இப்படி வெச்சிட்டு இந்தப் பக்கம் வாம்மா!”

ஜூஸ் நிரம்பிய கிளாசை, மேஜையின் மேல் வைத்து விட்டு, தந்தையின் அருகில் வந்தாள் விமலா.

“என்னப்பா?”

இரண்டு உள்ளங்கையையும் ஒன்றோடு ஒன்று நன்றாக தேய்த்து சூடாக்கி, “பளார்’ என்று, தன் மகளின் கன்னத்தில் அறைந்தார் சிவராமன்.

சிவராமனின் ஐந்து விரல்களும், விமலாவின் கன்னத்தில், அச்சு பதித்தாற்போல் பதிந்தன.

விம்மி அழுது கொண்டே, ”என்னப்பா…” என்றாள் விமலா.

கதிரேசனும், ராமநாதனும் அதிர்ச்சியுடன் சிவராமனையே பார்த்தனர்.

”மாமா… வந்து…” என்று வார்த்தை கிடைக்காமல் திக்கினான் கதிரேசன்.

” நான் வந்து இருபது நிமிஷம் ஆச்சு மாப்பிள்ளே..

பொண்டாட்டி பேச்சுக்கு மதிப்பு குடுக்க வேண்டியதுதான்.

தப்பில்ல..

ஆனா, எந்த காலத்திலேயும், எந்த நேரத்திலேயும், தன்னைப் பெத்தவங்களையும் விட்டுக் குடுக்கக் கூடாது.

குடும்பத்தில் முதல் மரியாதை அவங்களுக்குத்தான்.

அதுவும் அவுங்க மனைவிய இழந்தவங்க..

அதுக்கப்புறம்தான் பொண்டாட்டி, குழந்தைகள்..

நீங்களோ, சம்பந்தியோ அவளை அடிச்சா, புருஷன் வீட்டில எல்லாருமா சேர்ந்து, என்னை கொடுமை பண்ணறாங்கன்னு இவ போலீஸ்ல கம்ப்ளைன்ட் குடுக்கலாம்.

ஆனா, நானே ரெண்டு சாத்து சாத்தினா, எவன் கேட்கப் போறான்?

நான் வர்றேன் மாப்பிள்ளே,
வர்றேன் சம்பந்தி.

காத்தால நடக்கும் போது, அப்படியே நம்ம வீட்டுக்கும் அடிக்கடி வாங்க. கொஞ்ச நேரம் ஜாலியா பேசிட்டு இருக்கலாம்,” என்று கூறியபடியே, நடையைக் கட்டினார் சிவராமன்.

”அப்பா…” என அழுதபடியே கூப்பிட்டாள் விமலா.

”என்னம்மா?”

“இந்த ஜூசையாவது குடிச்சிட்டு போங்கப்பா”

இந்த வீட்டை கட்டிக் காத்து உன் கணவனை வாழ வைத்து விட்டு,இப்போது மனைவியை இழந்து நிக்கும் மாமனார, எப்போ நீ நல்ல மனசோட அப்பான்னு நினைக்கிறீயோ..அப்போ என்னைக் கூப்பிடு, சாப்பாடே சாப்பிட்டுட்டு போறேன்.” சரியா...

கம்பீரமாக நடந்து செல்லும் தன் சம்பந்தியை, வாஞ்சையுடன் பார்த்தார் ராமநாதன்...

மருமகள்களே...
உங்கள் கணவனை பெற்ற மாமனாரும் அப்பாதானே...

Want your business to be the top-listed Beauty Salon in Coimbatore?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

#_சர்ப்ப_காவடி 🐍 அரோகரா 🐓பாம்பினைக் காவடியில் கட்டிக்கொண்டு வந்து காணிக்கை செலுத்துவது சர்ப்பக் காவடியாகும். சர்ப்பக்காவ...
சாக்கடை கால்வாயில் குழந்தைகள் பட்டாசு வெடித்தால் கவனமாக இருக்கவும். 😨😨😨பாதாள சாக்கடையில் உள்ள அழுக்கு எரி வாயுவை வெளியிட...
Electric bike🚴🚴🚲
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் 11-8-21 புதன்கிழமை மாலை 6 மணிக்கு நடந்த லேப்டாப் திருட்டு..*பயணத்தில் கவனமாக இரு...
Indian strongest car
அனைவருக்கும் இனிய ஆடி -1 நல்வாழ்த்துகள்ஆடி -1 என்ன விஷேசம் தெரியுங்களா?தேங்காய் சுடுவதுதான். தேங்காய் எவ்வாறு சுடுவது? த...
👆These cup & saucer sets have won the Guiness book of world records award for beautification.  Lots of physics/optics in...
ROADS THAT HONK - 🖕 Innovative work done by HP Lubricants on the Jammu Srinagar Highway 👍This Move will help saving lots...
பெட்ரோல் விற்கும் விலைக்கு இந்த வண்டி தான் வாங்கலாம் என்று இருக்கிறேன். பெட்ரோல் தேவையில்லை, பேட்டரி தேவையில்லை.. காலில்...

Telephone

Website